உற்றார், உறவினர்கள் முன்னிலையில் நடுரோட்டில் திருமணம்.. தமிழக - கேரள எல்லையில் சுவாரசியம்.!!
Coimbatore Engineer married Munnar girl at Tamilnadu - kerala border line
கொரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் பயணம் செய்ய மாநில அரசின் அனுமதிக்கு ஏற்றாற்போல பாதுகாப்புடன் பயணம் செய்துகொள்ளலாம். ஊரடங்கு காரணமாக பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சூழலிலும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் சின்னார் பகுதியில் பொறியாளருக்கு கேரள - தமிழக எல்லையில் வீதியில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கேரளாவின் மூணாறு சின்னார் மாட்டுப்பட்டி பகுதியை சார்ந்தவர் சேகர் - சாந்தா. இவரது மகளின் பெயர் பிரியங்கா.
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி மூர்த்தி - பாக்யதாய். இவர்களின் மகன் ராபிஷன். இவர் பொறியாளர் ஆவார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணத்திற்கு நிச்சியம் நடந்து முடிந்த நிலையில், ஊரடங்கு காரணமாக திருமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது. திருமண தேதி மே மாதத்திற்கு தள்ளி வைத்தும் பலனில்லாது ஊரடங்கும் சேர்ந்தே நீட்டிப்பாகியுள்ளது.
இதனையடுத்து வரும் முகூர்த்த தேதியில் திருமணம் முடித்துவைக்க முடிவு செய்து மாட்டுப்பட்டியில் இருந்து கோவைக்கு செல்ல இ-பாஸ் கேட்டு மணமகள் குடும்பம் விண்ணப்பிக்கவே, கோவைக்கு செல்ல மணப்பெண்ணிற்கு மட்டும் அனுமதி வந்துள்ளது. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கூட அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படியே நேற்று ராபிஷன் மற்றும் பிரியங்காவின் திருமணமானது நடைபெற்று முடிந்துள்ளது. இருவரின் திருமணமும் சின்னாரில் இருக்கும் தமிழக - கேரள எல்லை பகுதியில் நடு ரோட்டில் வைத்து நடந்துள்ளது. உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.மணி தலைமைதாங்கி நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த பின்னர் புதுமண ஜோடிகள் கோயம்புத்தூருக்கு வந்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Engineer married Munnar girl at Tamilnadu - kerala border line