முன் விரோதத்தால் நள்ளிரவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்..!
Clash two parties midnight due to prior enmity
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 25 இவர் ஒரு தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் (27) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த முன் விரோதத்தின் காரணமாக, நேற்று இரவு 10 மணியளவில் கணேஷ் தனது நண்பர்களுடன் அனீஷ் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை அவர்கள் சேதப்படுத்திய தோடு தீ வைத்தும் எரித்தனர். இதனைக் கண்ட அனீஸ் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது கணேஷ் தரப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அனீசும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வரவே, கணேஷ் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஒடியது. அப்போது அங்கு நின்ற வேன் கண்ணாடிகளையும் உடைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அனீஸ் தரப்பினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அனீஸ் அவரது உறவினர்கள் சபீன், சுஜி ஆகியோர் நள்ளிரவு 12 மணியளவில், கணேஷ் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் வீட்டில் இருந்த புறாக் கூண்டுகளையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதையறிந்த, இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மோதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அனீஸ் மற்றும் கணேசை கைது செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Clash two parties midnight due to prior enmity