சென்னை || திருஷ்டி கழிக்க சென்ற நபரையே பலியாக வாங்கிய கட்டிடம்.!
chennai pallavaram man died in new building
சென்னையில் உள்ள பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டபட்டு அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது.
இந்நிலையில் இந்த புதிய கட்டிடத்திற்கு கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கட்டிடத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ராஜேந்திரன் கண் திருஷ்டி கழிப்பதற்காக ஊதுபத்தி, சூடம், பூசணிக்காய் மற்றும் உயிருள்ள கோழி போன்றவற்றை வாங்கிக் கொண்டு கட்டிடத்துக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் கையில் இருந்த கோழி பறந்து சென்றதனால், அதை பிடிப்பதற்காக துரத்தி சென்றபோது கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் ராஜேந்திரன் தவறி கீழே விழுந்தார்.
கீழே விழுந்ததில் ராஜேந்திரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகிலுள்ள சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
chennai pallavaram man died in new building