கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு..!
central minister darmendira prathan speech
திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நேற்று 75-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது:- "கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி தான் உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் அதாவது தமிழ் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும்.
தாய் மொழியில் கற்கும் கல்வி தான் அதிக பலன் தரும். தமிழகத்தை சோழ மன்னர்கள் ஆண்டபோது பொறியியல் படிப்பு இல்லை. பொறியியல் படிப்பு பயிலாமல் பல கட்டிடங்கள், கோவில்களை தமிழர்கள் கட்டினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான்.
பிரதமர் நரேந்திரமோடியின் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக தமிழ் மொழிக்காக, பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசும்போது, "தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புகள் தகவல் ஒளிப்பரப்பு துறை மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு பாரதத்தை உருவாக்க பெரும் பாடுபட்டு வருகிறார். தமிழகத்தில் இதுபோன்ற, சுயசார்பு பாரதத்தை வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட காலத்திலேயே செய்து காட்டினார்.
2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்ற மோடியின் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நனவாக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
central minister darmendira prathan speech