தமிழகத்தில் 5 பைசாவுக்கு பிரியாணி... உரிமையாளரின் அசத்தல் காரணம்!!
biryani sold for 5 paise
உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதலில் வரும் 100 பேருக்கு பார்சலில் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதியம் 12 மணியில் இருந்து பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். ஆண்கள் மற்றும் பெண்களும் பிரியாணி வாங்க வரிசையில் காத்திருந்தனர். அதன் பின் 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டு 100 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இது குறித்து கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறியவை, தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று பாரதி கூறினார். உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் நமது தமிழர்களின் பழங்கால தொன்மை அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
அதே போல்தான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்று அறிவித்தேன் என்று கூறினார்.