வண்ண வண்ண பறவைகள்... பார்ப்பதற்கு அசத்தல் காட்சி.. கரைவெட்டி பறவைகள் காப்பகம்...!!
birds sanctuary
தமிழகத்தில் உள்ள பறவைகள் காப்பகங்களில் கரைவெட்டி பறவைகள் காப்பகமும் ஒன்றாகும். இது அரியலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பளவில் பல வண்ணப் பறவைகளுடன் மனதை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
கரைவெட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளதால் இவ்வூரின் பெயரிலேயே கரைவெட்டி பறவைகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது.
அரியலூரிலிருந்து 22கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 32கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 58கி.மீ. தொலைவிலும் இச்சரணாலயம் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும். இச்சரணாலயத்திற்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்கின்றன.
இச்சரணாலயத்தின் ஏரி புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது. மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் இதுவும் ஒன்று.
இந்த ஏரி, மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாக உள்ளது. இச்சரணாலயத்தில் உள்ள 188 பறவை இனங்களில் 82 இனங்கள் நீர்ப்பறவைகளாகும்.
இங்கு வரும் பறவையினங்களில் கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற கொக்கு, நத்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், உண்ணி கொக்கு உள்ளிட்டவை நீர்வாழ் பறவைகளாகும்.
ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மஞ்சள் குருவி, மஞ்சு திருடி, மரங்கொத்தி பறவை, மைனா, புறா, மணியன் காக்கா, அண்டங்காக்கை, மயில், கல் குருவி, நாராயணபட்சி ஆகியவை நிலவாழ் பறவைகளாகும்.
இப்பறவைகள் இங்கு தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள் எப்போதும் கிடைக்கிறது என்பதே இப்பறவைகளின் வருகைக்கு முக்கியக் காரணம். பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருந்து இங்கு வரும் பறவைகள், இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.
இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. திபெத் மற்றும் லடாக் பகுதியில் இருந்து வரும் வரித்தலை வாத்து அதிக உயரத்தில் பறக்கும் நீர்ப்பறவையாகும்.
பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும். இப்படி ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு.