பயங்கர வேகத்தில் சென்ற பைக்.! தட்டி கேட்டவருக்கு நேர்ந்த விபரீதம்.!
bike fast riding murder
இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றவரை தட்டிக்கேட்ட காரணத்துக்காக தூத்துக்குடியில் கப்பல் மெக்கானிக்கும் அவரது நண்பரும் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி சிவந்தாகுளத்தைச் சேர்ந்த கப்பல் மெக்கானிக்கான முருகேசனும் அவரது நண்பருமான விவேக்கும் திருச்செந்தூர் சாலையிலுள்ள விநாயகர் கோவில் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
பட்டப்பகலில் அதுவும் பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையவைக்கிறது. வெட்டுப்பட்ட இரண்டு பேரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவனும் மாரி என்பவனும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த முருகேசனும், விவேக்கும் அதனைத் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணியும் மாரியும் சிறிது நேரத்தில் தங்களது கூட்டாளிகளுடன் வந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக போலீசார் கூறினர்.
தலைமறைவாகியுள்ள மணி, மாரி உட்பட 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதில் மணி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தற்போது ஜாமீனில்தான் அவன் வெளியில் இருப்பதாகவும் போலீசார் கூறினர்.