காணும் இடமெல்லாம் பசுமை... பரளிக்காடு.!
baralikaadu
கோவையில் இருந்து ஏறத்தாழ 68கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏறத்தாழ 47கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமையான சுற்றுலா தலம் பரளிக்காடு ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மாசுபடாத இயற்கை வளம், காணும் இடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என பரளிக்காடு பசுமைக்கு நிகராக திகழ்கிறது.
இங்கு வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டுமே பரிசல் சவாரி செய்யலாம். பயணத்தின்போது உயர்ந்த மலைகளின் எழிலையும், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியையும், கரையோரத்தில் காட்டு யானை, மான் மற்றும் காட்டெருமைக் கூட்டங்களையும் கண்டு ரசிக்கலாம்.

பின்னர் ஆற்றை ஒட்டிய பகுதியில், வனத்துறையின் பாதுகாப்புடன் விருப்பமிருந்தால் காட்டுக்குள் மலையேற்றம் செல்லலாம். இந்த மலையேற்றத்தின் போது அடர்ந்த பசுமையான காட்டை ரசித்து பார்க்கலாம். அத்திக்கடவு ஆறானது நம்முடைய மனதை மயக்குகின்றது. மேலும், இந்த ஆற்றில் குளிக்க குளிக்க இதமாக இருக்கும்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு வனத்துறையால் செலவிடப்படுகிறது.