அம்மா.. ஐயா... லோன் தருகிறோம் என்ற அழைப்பு வருகிறதா?.. மக்களே உஷார்.. அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்..!
Bank Loan Fraud Gang Arrest By Police in Salem
வங்கிக்கு நீங்கள் வரவே தேவையில்லை... கேட்கும் ஆவணங்கள் கொடுத்தால் போதும்... கடன் மற்றும் வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் உங்களின் அலைபேசியில் குறுஞ்செய்தி வாயிலாக அல்லது வாட்சாப் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.. பெரும்தொகை கொண்ட கடனும் நொடிப்பொழுதில் தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி மோசடி கும்பல் பல செயல்பட்டு வருகிறது.
வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் இவர்களுக்கு டார்கெட்டாக இருந்து வருகின்றனர். இந்த மோசடிக் கும்பலின் பேச்சை நம்பி சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் பணத்தை இழந்த நிலையில், அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், கடந்த 10 ஆம் தேதி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.
மேலும், பெண்மணி வழங்கிய புகாரில் கடந்த 9 ஆம் தேதி டாட்டா கேப்பிட்டல் என்ற நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய பெண்ணொருவர், தனிநபர் கடனாக ரூபாய் இரண்டு லட்சம் தருவதாகவும், இதனை இணையதளம் மூலமாகவே நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆதார் கார்டு மற்றும் வங்கி ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பெண்மணியும் அனைத்தையும் சமர்ப்பித்து விட்டு, தனது அலைபேசியில் வந்த ஓ.டி.பி எண்ணை பகிர்ந்துள்ளார்.
இதன்பின்னர், அவரது அலைபேசியில் இருந்து ரூ.20 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், இந்த சம்பவம் வெளிவந்த நிலையில், இது குறித்த விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருக்கும் நபரை கைது செய்துள்ளனர். அவர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு, இதற்காக தனியொரு கால் சென்டர் வைத்து நடத்தி வந்ததும் அம்பலமானது.
வேலையில்லாமல் வறுமைக்காக பணியை தேடும் பெண்களிடம், குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கி பணிக்கு அமர்த்தியுள்ளதும், இதில் பெரும்பாலானோர் இளம் வயதுள்ள பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தங்கள் என்ன வேலையை செய்கிறோம் என்ற விபரம் கூட தெரியாமல், பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய குமரேசன் மற்றும் விவேக் உட்பட மூன்று இளம் பெண்கள் என 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Bank Loan Fraud Gang Arrest By Police in Salem