ஜிலுஜிலு காற்றுடன்.. பசுமையை ரசிக்க.. அய்யனார் அருவி.!
ayyanar falls
விருதுநகரில் இருந்து ஏறத்தாழ 69கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்தில் இருந்து ஏறத்தாழ 10கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து ஏறத்தாழ 104கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய மூலிகை கலந்த அருவிதான் அய்யனார் அருவி.
இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த அருவி இராஜபாளையம் பகுதியின் முதன்மை சுற்றுலா ஈர்ப்பு பகுதியாக உள்ளது. திருவில்லிபுத்தூர், சிவகாசி மக்களின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.
இவ்வனப்பகுதி மலை ஏற்றத்தை விரும்புபவர்களுக்கு நல்ல இடமாக உள்ளது. அருவிக்கு போகும் வழியில் உள்ள அணை நகரத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது.
காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலை ஒட்டி அருவி அமைந்துள்ளது.
இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் இடமாக உள்ளது.
இது இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றிற்கும் நீராதாரமாக விளங்குகிறது.
இந்த அருவிக்கு அய்யனார் அருவி என்ற பெயர் வந்ததற்கு காரணம் இங்குள்ள சிறிய காட்டு அய்யனார் கோவிலாகும்.
வனத்தின் மூலிகை காற்றை சுவாசித்து அய்யனார் அருவியில் குளித்து வந்தால் தீராத நோய்களும் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை.

கரந்தமலையில் இருந்து நீர் ஊற்று உருவாகி, அருவியாக கொட்டுகிறது. இந்த நீர் மூலிகை செடிகளின் மீது பட்டு வருவதால், இதில் குளித்தால் புத்துணர்வும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் விழும் மூலிகை அருவியில் குளிப்பதற்காக செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டசாலிகளே...
இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது.