அத்திப்பூத்தாற் போல் அத்திவரதர்.. தமிழகத்தில் வறட்சி நீங்கி.. மழை கொட்டுமா?
athivaradar tharithanam 7
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் குளத்திலிருந்து எழுந்தருளி தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வைபவம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்தார். சயன கோலம் முடிந்து நின்ற கோலத்தில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் காட்சியளித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அரிய நிகழ்ச்சி என்பதால் அத்திவரதரை காண லட்சக்கணக்கான கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை அத்திவரதரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து பரவசம் அடைந்துள்ளனர்.
குளத்தில் இறக்கினால் மழை கொட்டுமாம்..
அத்திவரதர் பற்றி ஏராளமான கதைகள் இருந்தாலும், அவரை தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுக்கும்போது தண்ணீர் பஞ்சம் இருக்கும் என்றும், அவரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கும்போது, மழை பொழிந்து சுபிட்சம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் என்றாலே காமாட்சி அம்மன் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு ஆனந்தம் அளித்துள்ளார்.
அத்திவரதர் ஸ்பெஷல் :
அத்தி மரத்தால் செய்யப்பட்ட விக்ரம்தான் அத்திவரதர். சிறிது பின்னம் ஆனதால் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. பின்னமான சிலையை பூஜை செய்யக்கூடாது. ஆதலால் தண்ணீருக்குள் வைக்கப்பட்டது.
மற்றொன்று, பிரிட்டீஷ்காரர்கள் நம்மை ஆட்சி செய்தபோது, அத்திவரதரை எடுத்துச் செல்ல முயற்சி செய்ததால், தண்ணீருக்குள் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை வெளியே எடுத்து பூஜை செய்கின்றனர். 48 நாட்களுக்கு பூஜை செய்து மீண்டும் குளத்திற்குள் வைக்கப்படுகிறார். முதலில் எடுக்கும்போது, குளம் வற்றியதால் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1979ல் எடுக்கும்போது, தண்ணீர் பஞ்சம் இருந்து இருக்கிறது. அத்திவரதரை குளத்திற்குள் இருந்து வெளியே எடுத்து பூஜை செய்து, மீண்டும் குளத்திற்குள் வைத்துள்ளனர்.
குளத்திற்குள் வைத்த பின்னர் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல், தற்போது மீண்டும் குளத்திற்குள் இருந்து வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார் அத்திவரதர்.
தமிழகமும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மீண்டும் குளத்திற்குள் அத்திவரதரை வைக்கும்போது நன்றாக மழை பெய்யும் என்றும், நாடு சுபிட்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் 2 நாட்கள் மட்டுமே அத்திவரதர் தரிசனத்தை காண முடியும் என்ற நிலையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசன அனுமதி நிறைவடைகிறது.
ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு 10 மணிக்குள் கிழக்கு கோபுரத்துக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி உரிய பூஜைகளைச் செய்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார்.
English Summary
athivaradar tharithanam 7