ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் கேட்கிறார்கள்!! அதிர்ந்து போன ஆ.ராசா!!
a.rasa says about tasmac
நேற்று நீலகிரி மாவட்டம் உதகை அருகே இத்தலார் என்ற கிராமத்தில், திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் க.ராமச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன் மற்றும் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டார். பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றிய ராசா," தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளோ அல்லது தலைவர்களோ நிர்ணயிக்கப்படவில்லை.
திமுக உள்ளாட்சி தேர்தலில் ஜெயித்துவிடும் என்ற பயத்திலேயே அதிமுக ஆளும் கட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கிறது. இதனால், கிராமப்புறங்களில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது.
டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகமாக வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு தமிழகத்தில் சுமார் 3 கோடி மது பாட்டில் விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.80 கோடி லஞ்சமாக கிடைக்கிறது.
இதிலிருந்து தான் மக்களுக்கு தினக்கூலியாக ரூ.200 வழங்கப்பட்டது. அதிலும் கூட ரூ.50 முதல் ரூ.75 வரை பிடித்தம் செய்யப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மாநிலத்தில் ஊழல் ஆட்சியும், மத்தியில் பிரயோஜனம் இல்லாத ஆட்சியும் தான் நடைபெற்று வருகிறது" என கூறியுள்ளார்.