ஊழல் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை! ஒட்டுமொத்த உண்மையையும் போட்டுடைத்த ஓய்வுபெற்ற நீதிபதி பட்னாயக்
Alok Varma Rajinama
சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா அவர்கள், முறைகேடு வழக்குகளில் சிக்கிய மொயின் குரேஷியிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய, இயக்குனர் அலோக் வர்மா உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் நாட்டு மக்களை அதிரவைத்தது.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ சிறப்பு பிரிவு டி.எஸ்.பி தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான அதிகார மோதல் வெளிப்படையாகவே நாட்டு மக்களுக்கு தெரியும்படி ஒவ்வொரு நகர்வும் இருந்தது.
இந்த விவகாரத்தில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கிடையே இரு சிபிஐ இயக்குனர்களையும் அழைத்து பிரதமர் மோடி பேசி உள்ளார். இதனையடுத்து, அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது.
அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றதில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 8 ஆம் தேதி, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. மேலும், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவே தொடர்ந்து செயல்படுவார் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரதமர் தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழு, அலோக் வர்மாவுக்கு எதிரான புகார்கள் தொடர்பான மத்திய கண்காணிப்பு ஆணையத்தின்(சிவிசி) அறிக்கையை ஏற்று கொண்டு, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கம் செய்தது. மேலும், சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா அவர்களை, மத்திய தீயணைப்புத்துறை இயக்குநராக நியமனம் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா செய்தார். ஜனவரி 31 ஆம் தேதியுடன் அசோக் வர்மாவின் பதவி காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அலோக் வர்மா வழக்கில் ஊழல் ஆணைய மேற்பார்வையாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பட்னாயக் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஊழல் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை; அலோக் வர்மா மீது பிரதமர் தலைமையிலான குழு எடுத்த முடிவு அவசர கதியில் எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.