தமிழ் திரையுலகில் " சின்ன கலைவாணர் " என்று அழைக்கப்படும் நடிகர் விவேக், தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நகைசுவை நடிகராக இருந்தார். தனது நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்துக்களை கூறி திரைத்துறை ரசிகர்களை சிரிக்கவைத்தது மட்டுமல்லாது, சிந்திக்கவும் வைத்தார். பாளயத்து அம்மன், லவ்லி, அள்ளித்தந்த வானம், யூத், காதல் சடுகுடு, விசில், காதல் கிசு கிசு, பேரழகன், சாமி, திருமலை, மீசைய முறுக்கு உள்ளிட்ட திரைப்பட நகைசுவை மற்றும் வசனங்கள் சிந்தனைக்கான எடுத்துக்காட்டாகும்.
தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது, திரைப்பட வரலாற்றிலேயே நகைசுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை கூறி, கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் அவர்களின் வழிப்படி, தான் நடித்து வந்த திரைப்படங்களில் இலஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள் மற்றும் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை கருத்துக்களாக பகிர்ந்து, சமூக சிந்தனையையும் கடைபிடித்து தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.
திரைத்துறையில் நடிகர் விவேக்கின் பங்கினை பாராட்டி இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கிய நிலையில், நாடக கலைஞனாக தனது வாழ்க்கையை தொடங்கி, திரைத்துறையில் நகைச்சுவையோடு பல சமூக கருத்துக்களை கூறி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, 25 வருடத்திற்கு மேலாக இருந்த வரலாறு இன்று வாயடைத்து இருக்கிறது. ஆம், நடிகர் விவேக் காலமாகிவிட்டார். இதனை திரைத்துறையினராலும், தமிழக மக்களாலும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று தீடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதியானவர், விரைவில் வீடு திரும்புவார் என்று தமிழ் மக்கள் காத்துகொண்டு இருந்த வேளையில், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இன்று காலை இறப்பு செய்தி வெளியானது. ஒருகணம் செய்தியை அறிந்த மக்களின் மனமே நின்று போனது. யாராலும் நம்ப கூட இயலவில்லை. நேரம் அதிகரிக்க, அதிகரிக்க அதனை ஏற்றுக்கொண்டு மனதை தேறிக்கொள்ள தொடங்கினர். நல்லவர்கள் பூவுலகில் வாழ கிடைக்கும் சில நாட்களில், எதிர்கால சந்ததிகளுக்கு சிறந்த யோசனைகளை கொடுத்து செல்கிறார்கள்.
சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக், கடந்த 1961 ஆம் வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவரது இயற்பெயர் விவேகானந்தன் ஆகும். விவேக்கின் குடும்பத்தினரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் கழுகுமலை கிராமம் ஆகும்.
தனது பள்ளிப்படிப்பை மதுரையில் நிறைவு செய்த விவேக், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலை துறையில் பி.காம் பட்டம் பெற்றார். பின்னர் எம்.காம் முதுகலை பட்டமும் பெற்ற நிலையில், சிறிதுகாலம் தொலைபேசி ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தார். இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வந்த விவேக், டி.என்.பி.எஸ்.சி தேர்வு குரூப் 4 இல் தேர்ச்சியடைந்து, சென்னை தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராக பணியாற்றினார்.
கடந்த 1987 ஆம் வருடம் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நிலையில், 1989 ஆம் வருடம் வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் பேசிய " இன்னைக்கி செத்தா நாளைக்கி பாலு " என்ற வசனம் பிரபலமடைய செய்தது.
இதனையடுத்து, ஒருவீடு ஒரு வாசல், புதுமாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதய வாசல், புத்தம் புது பயணம் போன்ற படங்களில் நடித்த நிலையில், தனது நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்தையும் தெரிவித்து சிரிப்புடன் சிந்தனையையும் ஏற்படுத்தினார். உனக்காக எல்லாம் உனக்காக, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, உன்னருகே நானிருந்தால், ஆசையில் ஓர் கடிதம், சந்தித்த வேலை, கந்தா கடம்பா கதிர்வேலா, பெண்ணின் மனதை தொட்டு, சீனு, லூட்டி, டும் டும் டும், விஸ்வநாதன் ராமமூர்த்தி, பூவெல்லாம் உன்வாசம், ஷாஜகான், தென்காசி பட்டணம், சாமி, விசில், பாய்ஸ், பேரழகன், அந்நியன், சிவாஜி, குரு என் ஆளு, தம்பிக்கு இந்த ஊரு, சிங்கம், பலே பாண்டியா, மாப்பிள்ளை, வெடி போன்ற படங்களில் நடித்தார்.
விவேக்கின் நகைசுவை இலஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றை கருத்தாக கொண்டு இருந்ததன் காரணத்தால், திரைத்துறை ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்றும், மக்களின் கலைஞன் என்றும் அழைத்து வந்தனர். மேலும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவிற்கேற்ப முன்னோடியாக வாழ்ந்து வந்தார். சொந்த வாழ்க்கையிலும் சமூக அக்கறையை கருத்தில் கொண்டு, வறட்சியை போக்கும் வகையில் கலாமின் பெயரில் 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்.
இன்னைக்கி செத்தா நாளைக்கு பாலு,
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்,
கோபால்.....,
நான் எஸ்.ஐ ஆ இருக்கேன்,
இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன்டா என்று பல்வேறு வசனங்கள் காலத்தினால் மறையாதது.
இந்த அரசால் கவுரவப்படுத்தப்பட்டு பத்ம ஸ்ரீ விருது, விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது, ரன், சாமி, பேரழகன் மற்றும் சிவாஜி திரைப்படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது, உன்னருகே நானிருந்தால், ரன், பார்த்தீபன் கனவு மற்றும் சிவாஜி படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேசிய தமிழ் திரைப்பட விருது, ஆண் நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது, கொடைக்கானல் பண்பலை வானொலி விருது, ஐ.டி.எப்.ஏ விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.
வெறும் பொழுதுபோக்கு காட்சிகளுக்காக நகைச்சுவையை காட்சிப்படுத்தாமல், வாழ்வியலின் சில நொடிகளை புரிய வைக்கும் ஆற்றலை அவை வழங்கும். நகைச்சுவையில் உள்ள கர்த்துக்களையும் கூறுவதில் வல்லவராக விவேக் இருந்து, சமுக குறிக்கோளை கடைபிடித்து செயல்படுத்தி வாழ்ந்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.