தொடரும் காவல் துறையினரின் சோகம்….! தற்கொலை செய்து கொண்டார் தலைமைக் காவலர்….!
a head constable committed suicide
சமீப காலமாக, தமிழகத்தில், தொடர்ச்சியாக, காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏன் இந்த அபாய முடிவு? தீர்வு காண முடியாத பிரச்சினைகளே, உலகத்தில் இல்லை. ஆனால், அதற்கு தற்கொலை என்பது எப்போதுமே தீர்வாகாது.
பணிச்சுமை, மனச்சோர்வு காரணமாகவே, தொடர்ச்சியாக, போலீஸ்காரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், என்று உளவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மீண்டும ஒரு தற்கொலை சம்பவம், தமிழகத்தை அதிர்ச்சிக்க்குள்ளாக்கி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (வயது 45). இவர் போளுர் காவல் நிலையக் குற்றப் பிரிவில், தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி சரஸ்வதி (வயது 40) திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில், சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 30-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 15 நாட்களாக தொடர் விடுப்பில் இருந்துள்ளார். அப்போது, இவர் யாருடனும் பேசாமல், அதிகமான மன அழுத்தத்தில் இருந்தார், என்று சொல்லப் படுகிறது.
கடந்த ஆண்டு, இவர் தலைமையிலான போலீசார், ஒரு கைதியை விசாரணைக்காக நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். முனியன் மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் தான், அந்தக் கைதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, முனியன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, முனியனுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் கிடைக்கவில்லை. இதனால், கடுமையான மன அழுத்தத்தில் இருந்த முனியன், அய்யம்பேட்டையில் உள்ள குளத்தின் கரையில், விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார்.
அதைக் கண்ட, அப்பகுதி மக்கள், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, முனியனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக அறிவித்தனர்.
முனியனின் தற்கொலை, தமிழகத்தில், மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
a head constable committed suicide