திண்டுக்கல் || மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.!
8th class girl died due to electric shock in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள போஜனம்பட்டி ஏ.வி.பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துராணி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகளான தவதர்ஷினி (13) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பெரியசாமி மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு செல்வதற்காக தவதர்ஷினி குளிப்பதற்காக ஹீட்டரில் தண்ணீர் சுட வைத்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து தவதர்ஷினி தண்ணீர் சூடேறி விட்டதா என்பதை பார்ப்பதற்காக கைவைத்து பார்த்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
தவதர்ஷினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தவதர்ஷினி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
8th class girl died due to electric shock in Dindigul