ஜெயலலிதா பிறந்தநாளில், ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அப்டேட்!
7th time extend aarumugasamy enquiry commission
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் ஆயுட்காலத்தினை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், கடந்த 2017 செப்டம்பர் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2017 நவம்பர் 22ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கியது.
அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர், ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் பணியாற்றியவர்கள், உறவினர்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை ஆணையத்தின் கால வரம்பு மூன்று மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 2017 டிசம்பர் மாதத்திலிருந்து ஆணையத்தின் கால அவகாசம், 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆணையத்துக்குத் தடை விதிக்க கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தனர். விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணையும் அப்படியே முடங்கியுள்ளது. இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் இன்று (பிப்ரவரி 24) நிறைவடைந்தது. இதனையடுத்து மேலும் 4 மாதங்கள் ஆணையத்திற்கான விசாரணைக் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
7th time extend aarumugasamy enquiry commission