மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை இறக்கிய 3 பேர்.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.!
3 died in electrocution in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை இறக்கிய 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் சந்தைபேட்டை ரோடு நகராட்சி பள்ளி எதிரே பச்சையப்பன் (50) என்பவரது வீட்டின் மேல் மாடியில் இலியாஸ் (70) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இதையடுத்து இலியாஸ் வேறு வீட்டிற்கு குடியேற முடிவு செய்து இன்று காலை வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் டெம்போ வேனில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
பின்பு வீட்டின் உரிமையாளர் பச்சையப்பன், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ஓட்டுநர் கோபி(23), மேலக்கார திருவை சேர்ந்த குமார்(23) மற்றும் இலியாஸ் ஆகியோர் மாடியில் இருந்து பால்கனி வழியாக பீரோவை கயிறு கட்டி டெம்போவில் ஏற்றுவதற்காக இறக்கினர்.
அப்பொழுது வீட்டின் முன்பு சென்ற உயர்மின் கம்பி எதிர்பாராத விதமாக பீரோ மீது உரசியுள்ளது. இதனால் தீப்பொறிக்கு கிளம்பி, பீரோவை இறக்கு கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. மேலும் வீட்டிலும் தீ பற்றியுள்ளது.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் பச்சையப்பன், கோபி, இலியாஸ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் தகவல் அறிந்து வந்த தர்மபுரி போலீசார், விபத்தில் படுகாயமடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 died in electrocution in dharmapuri