டி20 உலகக்கோப்பை அணியில் புறக்கணிக்கப்பட்ட நடராஜன்.. காரணம் என்ன.?
natarajan not included in the indian team
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் வரும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் யார்க்கர் கிங் எனப்படும் டி நடராஜன் உலக கோப்பை அணியில் இடம் பெறாதது பேசுபொருள் ஆகியுள்ளது. நடராஜன் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் தனது திறமையை நிரூபித்தார். இந்திய அணியின் வருங்கால நட்சத்திர வீரர் என்றும் பலரால் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இரண்டு போட்டிகளுடன் வெளியேறினார். பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன், நீண்ட நாட்களாக ஓய்வெடுத்து வருகிறார். அவர் தற்போது பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தன்னுடைய பயிற்சியை தொடங்கி உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் எப்படியும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
English Summary
natarajan not included in the indian team