ஐபிஎல் பஞ்சாப் அணியின் கேப்டன் மாற்றம்! அணியிலிருந்து வெளியேறிய அஸ்வின்?!
Kings XI Punjab plan to change the Captain for next season
ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருக்கும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வினை அந்த அணி விடுவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சீசனுக்கான போட்டிக்கு முன் நடைபெற்ற ஏலத்தில், அஷ்வினை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சுமார் 7.6 கோடி கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை ஏலம் எடுத்தது.
இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப் அணிக்கு அஷ்வின் வருகை பலம் சேர்க்கும் என ஏலம் எடுத்த வேகத்தில் அவரையே அணியின் கேப்டனாகவும் அறிவித்தது பஞ்சாப் அணி நிர்வாகம். அந்த அணியில் திறமை வாய்ந்த, உலகப்புகழ் பெற்ற வீரர்கள் பலர் இருந்தும், அந்த அணியால் லீக் சுற்றை கூட தாண்ட முடியவில்லை. அஸ்வின் தலைமையில் விளையாடிய இரண்டு வருடமும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. முதல் வருடம் முதல் பாதியில் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அணி, இரண்டாவது பாதியில் சொதப்பலாக விளையாடி, தொடரில் இருந்து வெளியேறியது. அதேபோல இரண்டாவது வருடமும் எதுவுமே மிக சிறப்பாக அமையவில்லை.
இதையடுத்து அந்த அணியின் கேப்டனை மாற்றுவதற்கு அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்புகளில் இருந்து வந்த நியூஸிலாந்தின் மைக் ஹஸ்ஸன் உள்ளிட்ட அனைவரும் நீக்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டனையும் நீக்குவதுடன், அவரை அணியில் இருந்தே வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் ஷேவாக், அந்த அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து 2019 சீசனுக்கு முன்னரே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது ரவிச்சந்திரன் அஷ்வினை, தங்கள் அணியில் இணைப்பதற்கு டெல்லி கேப்பிடல் அணி தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அஷ்வின் எங்கள் அணிக்கு வந்தால் எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும் என அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரவிச்சந்திரன் அஷ்வினை ஏலம் எடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் போட்டியில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. டெல்லி அணியானது ரவிச்சந்திரன் அஷ்வினை, அவர்களிடம் உள்ள மீதி தொகையை வைத்து, பஞ்சாப் அணியிடமிருந்து வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அவருக்கு பதிலாக மாற்று வீரரை டெல்லி பஞ்சாப்க்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வின் டெல்லி அணியுடன் இணைவதற்கே அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணி இந்த வருடம் மிக சிறப்பாக விளையாடிய பிளே ஆப் வரை முன்னேறியது. அந்த அணியில் இளம் வீரர்கள் துடிப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதால், அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இணையும் போது கூடுதல் பலம் பெறும் என அந்த அணியினரால் நம்பப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க பஞ்சாப் அணியை பொறுத்தவரை அந்த அணியின் புதிய கேப்டனாக, இந்திய அணியின் இளம் வீரராக இருக்கும் லோகேஷ் ராகுலை நியமிக்க பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் ராகுல் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஐபிஎல் போட்டியில் கேப்டன் பொறுப்பே தேடி வருவது அதிஷ்டத்தை தவிர வேறு என்ன இருக்கும்...
English Summary
Kings XI Punjab plan to change the Captain for next season