இந்திய வீராங்கனை அபாரம்! ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளையும் அள்ளினார்! எட்டு பேர் டக் அவுட் ஆன பரிதாபம்!
Kashvee gautam got all 10 wickets against Arunachal Pradesh
பிசிசிஐ நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் விளையாடும் ஒருநாள் போட்டி தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற போட்டியில் அருணாச்சல் பிரதேசம் அணியும் சண்டிகர் அணியும் மோதின.
முதலில் விளையாடிய சண்டிகார் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை அடித்தது. அந்த அணியின் கேப்டன் காஷ்வி கவுதம் அதிகபட்சமாக 49 ரன்களை அடித்திருந்தார். இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அருணாச்சலப்பிரதேசம் அணி 25 ரன்களில் சுருண்டு பரிதாபமாக 161 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
சண்டிகார் அணியின் கேப்டனான காஷ்வி கவுதம் அருணாச்சலப் பிரதேசம் அணியின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அருணாச்சலபிரதேசம் அணியில் 8 வீராங்கனைகள் டக் அவுட் ஆன நிலையில், அதிகபட்சமாக நேகா சர்மா 10 ரன்களையும், உதிரி வகையில் 8 ரன்களும் கிடைத்தது.நபம் மார்தா 4 ரன்களும், நபம் பாரா 3 ரன்களும் அடித்திருந்தனர்.
4.5 ஓவர்களை மட்டுமே வீசிய காஷ்வி கவுதம் ஒரு மெய்டனுடன் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 10 விக்கெட்டுகளை அள்ளினார். அருணாச்சலப்பிரதேசம் அணி 8.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய ஜம்மு-காஷ்மீர் உடனான போட்டியிலும் 7 விக்கெட்டுகளை காஷ்வி கவுதம் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பீகார் உடனான முதல் போட்டியிலும் அவர் 10 ஓவர்கள் பந்து வீசி எட்டு ஓவர்களை மெய்டனாக வீசி 6 ரன்களையே மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆனால் பிஹார் உடனான போட்டியில் சண்டிகர் அணி தோல்வியை சந்தித்தது.
English Summary
Kashvee gautam got all 10 wickets against Arunachal Pradesh