திக் திக் சூப்பர் ஓவர், கடைசி பந்தில் வெற்றியை பறித்த ரோஹித் ஷர்மா! வரலாறு படைத்தது இந்தியா!
india won the match and series with super over win
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதனை விரட்டிய நியூசிலாந்து அணி அதே 179 ரன்கள் மட்டுமே குவிக்க ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா இன்றையப் போட்டியில் நிதானமாக தொடங்கி போக போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 89 ரன்கள் சேர்த்திருந்த போது கே.எல்.ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோஹித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹாமிஷ் பென்னட் வீசிய 6 ஆவது ஓவரில் மூன்று சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாச 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா.
இந்திய அணியில் வழக்கமாக 3வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை சிவம் துபேவை களமிறக்கினார். ஆனால் இந்த முடிவு ஆட்டத்தினை மாற்றியமைத்தது. அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுக்க ஆரம்பித்தது. வழக்கம்போல தொடக்க வீரர் மார்டின் குப்டில் அதிரடியாக விளையாடி 31 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட்கள் சரிந்தாலும் அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் நிலைத்து நின்று விளையாடி அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறுவதற்கு மிகவும் கடுமையாக உழைத்தார். அவர் 95 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார்.
அது ஆட்டத்தில் திருப்புமுனையாக ஏற்பட்டது. 5 பந்துகளில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையிலிருந்த நியூசிலாந்து அணி கடைசி 5 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன்களை மட்டுமே எடுத்தது. அதில் ஒரு ரன் பைஸ் ஆக எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் முதல் பந்தே சிக்ஸ கொடுத்த முகமது சமி அடுத்த 5 பந்துகளை சிக்கனமாகவே வீசினார் என்பது குறிப்பிடதக்கது. இறுதி பந்தில் ரோஸ் டைலரை அவுட் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எதிர்பாராமல் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவரை நோக்கி நகர்ந்துள்ளது.
நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் கேப்டன் கனே வில்லியம்சன் மார்ட்டின் குபதில் களமிறங்க இந்திய அணி சார்பில் பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா வந்தார். இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்களை வீசிய அவர் 45 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் சொதப்பினார். அவரை மீண்டும் அழைத்த விராட் கோலி சூப்பர் ஓவரிலும்சொதப்பல் தொடர அதிர்ச்சி அடைந்துதான் போயிருப்பார். 6 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சரும் உட்பட 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ராகுல் களம் இறங்கினார்கள். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி பந்துவீசினார். முதல் இரண்டு பந்துகளில் 3 ரன்களும், அடுத்த இரண்டு பந்துகளில் 5 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட, கடைசி இரண்டு பந்துகளில் அபார சிக்ஸரை விளாசிய ரோஹித் இந்தியாவிற்கு வெற்றியை பறித்து கொடுத்தார். 6 பந்துகளில் இந்திய அணி 20 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்தது.
English Summary
india won the match and series with super over win