இந்தியா அபார வெற்றி! தொடரை கைப்பற்றி கோப்பையை வென்ற இந்தியா!
india won the match and series
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரினை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
தொடரை நிர்ணயிக்கும் 3-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதன்படி இந்திய அணி மீண்டும் முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் அசத்தலான தொடக்கத்தினை கொடுத்தனர்.
அதிரடியாக ஆடிய ரோஹித் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 5 சிக்சர்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவர் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 34 பந்துகளில் 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல லோகேஷ் ராகுலும் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். 29 பந்துகளில் அரை சதம் அடித்து ராகுல் 55 பந்துகளில் 91 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இடையில் வந்த ரிஷப் பாண்ட் வந்த வேகத்தில் விளாச முயற்சிக்க சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.
ரிஷப் பண்ட் அவுட் ஆனதும் களமிறங்கிய விராட் கோலி முதலில் சில பந்துகள் தடுமாறினாலும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அவர் 21 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை கதற வைத்துள்ளார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை குவித்துள்ளது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் ஏவின் லூயிஸ் பீல்டிங் செய்யும் போது காயமடைந்து வெளியேறினார். அவர் மருத்துவமனைக்கு சென்றதால் அவரால் களமிறங்க முடியவில்லை. ப்ரண்டன் கிங் சிம்மோன்சுடன் களமிறங்கினார். ஆனால் அந்த முடிவானது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைகொடுக்கவில்லை.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் புவனேஷ்வர் குமார் முகமது ஷமி ஆகிய மூவரும் முதல் 5 ஓவர்களில் கனகச்சிதமாக வீசி மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முன்னணி வீரர்களான கிங், சிம்மோன்ஸ், நிக்கோலஸ் பூரன் ஆகிய மூவரும் 17 ரன்களுக்குள் வெளியேற, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த சிம்ரோன் ஹெட்மையர் பொல்லார்டும் இந்தியாவின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள்.
இந்திய அணியினர் ஆடியது போலவே அடித்து ஆடிய அவர்கள் முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. சிம்ரோன் ஹெட்மையர் 41 ரன்களிலும் பொல்லார்ட் 68 ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது
English Summary
india won the match and series