இறுதி நேரத்தில் மாறிய ஆட்டம்! இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடனான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, இரண்டாவது போட்டியானது இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ஷஃபாலி வர்மாவும், மந்தனாவும் அடித்து ஆடி அசத்தினார்கள். 

குறிப்பாக கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த ஷபாலி, கடந்த போட்டியில் யாருடைய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அவருடைய பந்துவீச்சை புரட்டி எடுத்தார். கேத்தரின் புருண்ட் வீசிய ஓவரில் 5 பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசிய அவர் 48 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டாக வீழ்ந்தார். மந்தனா 20 ரன்களை எடுத்து, முதல் விக்கெட்டாக வெளியேறினார்

அதன் பிறகு வந்த ஹர்மன்பிரீத் கவுர் 25 பந்துகளில் 31 ரன்களும் தீப்தி ஷர்மா இறுதிநேரத்தில் 24 ரன்களும் எடுக்க இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை பீமவுண்ட் அதிரடியான ஆட்டத்தினால் அந்த அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 14வது ஓவர் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 106 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி, அந்த ஓவரில் தீப்தி சர்மா கொடுத்த திருப்புமுனையின் காரணமாக நிலைகுலைய ஆரம்பித்தது. 

அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பீமவுண்ட் மற்றும் நைட் இருவரையும் தீப்தி சர்மா வெளியேற்ற அதற்கடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய தரப்பில் மிக சிறப்பாக பந்து வீசிய பூனம் யாதவ் 2 விக்கெட்டும் தீப்தி சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்திய அணியின் துடிப்பான பில்டிங்கின் காரணமாக இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து கோட்டை விட்டனர். மொத்தமாக எட்டு விக்கெட் விழுந்ததில் 4 விக்கெட்டுகள் ரன் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வெற்றியின் மூலம் தொடர் சமநிலையில் நீடிக்கிறது. தொடர் யாருக்கு என்பதை உறுதி செய்யும் இறுதிப் போட்டியானது புதன்கிழமை நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India women won the 2nd T20 against England women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->