'ஓய்வு பெறும் முடிவு எளிதானது அல்ல'.. ஓய்வு குறித்து உருக்கமாக பேசிய இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.!
Eion Morgan speech about international cricket retirement
இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய எய்ன் மோர்கன், அதன்பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். கடந்த 2019 ஆண்டு உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது.
இவர், இதுவரை 126 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று இங்கிலாந்தின் சிறந்த வெள்ளைப்பந்து கேப்டனாகத் திகழ்ந்துள்ளார். 248 ஒருநாள் போட்டிகளில் 7701 ரன்களையும், 115 டி20 போட்டிகளில் 2,458 ரன்களையும் எடுத்துள்ளார். 35 வயதான மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது : "மிகவும் கவனமாக ஆலோசித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்று நம்புகிறேன்.
ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அணிக்கு செய்துள்ள சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். சில சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடிய அனுபவங்கள் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும். இரண்டு உலக கோப்பையை வென்ற (2010-ம் ஆண்டு 20 ஓவர் மற்றும் 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை) அணியில் இடம் பெற்றதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
ஆனால் வருங்கால வெள்ளை நிறபந்து போட்டிக்கான (20 ஓவர் மற்றும் ஒரு நாள்) இங்கிலாந்து அணி முன்பு எப்போதும் இருந்ததை விட இன்னும் வலுவாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Eion Morgan speech about international cricket retirement