சூரியனிற்கு பொங்கல் வைத்து வழிபடுவது எதற்காக?..!  - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் (சூரியப் பொங்கல்) :

பொங்கல் பண்டிகை என்பது சூரிய வழிபாட்டு பண்டிகையாகும். தை மாதம் முதல் தேதியை தைப்பொங்கல் என்று கொண்டாடுகிறோம். தை மாத முதல் நாளில் சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்தர அயனம் என்று பெயர். அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும். அதனால் இக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாத ஒன்று எதுவும் இல்லை.

தட்சிணாயனத்தின் ஆறு மாதங்களில் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் பல நோய்கள், துன்பங்கள் உத்திராயண காலத் துவக்கத்தில் இறைவன் அருளால் நீங்குவதால், தை மாதம் முதல் தேதி சூரியபகவானுக்கு ஆராதனைகள் செய்து சூரியப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

இன்று பொங்கல் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, நண்பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, மாலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நல்லநேரத்தில் வைத்து கடவுளை வழிபடலாம். 

பொங்கலின் சிறப்பு :

பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்த நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவர். இதுதவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுவார்கள்.

அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப்பொங்கல் திருநாளாகும்.

புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுபடுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரியபகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் எடுத்துக்கொள்வார்கள்.

புதிய பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.பொங்கலோ பொங்கல்... தமிழர்களின் பாரம்பரியம் எங்கும் பரவட்டும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why celebrate pongal and pray god


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->