கிராமத்து திருவிழா.. பால்குடம் எடுப்பது ஏன்?!
village functions paalkudam for amman
பால்குடம் எடுப்பது ஏன்?:
கிராமங்களில் திருவிழாக்களின்போது முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுப்பதை நாம் பார்த்திருப்போம். இன்றளவிலும் பால் குடம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம். எதற்காக பால்குடம் எடுக்கப்படுகிறது?
ஒருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள், நேர்த்திக்கடன் போன்ற காரணங்களால் திருவிழக்களின்போது பால்குடம் எடுக்கின்றார்கள்.
விரதம் :
கோவில் திருவிழா ஆரம்பிக்கும்போது பால்குடம் எடுப்பவர்கள் கையில் காப்புக்கட்டி, எட்டு நாள் விரதம் இருப்பர். அதன்பின் பால்குடம் எடுக்கும் நாளில் அருகிலிருக்கும் விநாயகர், சிவன் கோவிலுக்கு சென்று மஞ்சள் நிற ஆடை அணிந்து சொம்பு, தீர்த்தக்குடம் போன்றவற்றில் கறந்த பாலை பூஜை செய்கிறார்கள். பின் அங்கிருந்து ஊர்வலமாக வந்து திருவிழா நடக்கும் கோவிலில் வீற்றிருக்கும் மூலவருக்கு பாலை அபிஷேகத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
பால் அபிஷேகம் :
கோவிலில் சிலைகள் அமைக்கப்படும்போது பீடத்தில் மருந்துப் பொருட்களை வைத்து சிலைகளை அமைப்பர். அச்சிலைகளின் மேல் பால் போன்றவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் சிலையின் பீடத்தில் உள்ள மருந்துப் பொருட்களில் பால் கலக்கிறது.
பின் அந்த அபிஷேக பால் கருவறையின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வடிகால் வழியாக வெளியே வரும். வடிகால் தொட்டியில் அபிஷேகம் செய்யப்பட்ட பாலை பக்தர்கள் எடுத்து பருகுவர். இந்த அபிஷேக பாலை பருகுவதால் பல மருத்துவப் பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.
பால்குடம் எடுப்பதன் பலன்கள் :
திருவிழாக்களின்போது முறையாக விரதம் இருந்து பால்குடம் எடுத்து அதை தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் செய்து குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தருவார்கள் என்பது நம்பிக்கை.
அம்பிகைக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுப்பது வழக்கம். இதுபோன்ற நேர்த்திக்கடன்களின் வாயிலாக, நம்முடைய வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
English Summary
village functions paalkudam for amman