நல்லிணக்கத்தையும் அன்பையும் பேணி, உயர்வுகளைப் பெற்றிட உழைத்திடுவோம்.! டி.டி.வி தினகரன் மிலாடி நபி வாழ்த்து.!
ttv wishes miladi nabi wishes to muslims
அண்ணல் நபிகளாரின் பிறந்த நாளான மிலாடி நபி திருநாளை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் நிறைந்தநல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுமையான கருத்துக்களையும், தத்துவ சிந்தனைகளையும் தந்தவர் நபிகள் நாயகம். அன்பு, பண்பு, நட்பு, உறவு, போர், அமைதி என எல்லாவற்றிலும் உயரிய கோட்பாடுகளையும், பின்பற்றத்தக்க நெறிமுறைகளையும் மனித சமுதாயத்திற்கு
அளித்தவர். “தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது” என்று சொல்லி தாய்மைக்கும்,பெண் இனத்திற்கும் பெரும் உயர்வு செய்தவர்.
“உழைப்பவரின் வியர்வை காய்வதற்குள் அவருக்கான ஊதியத்தைக்கொடுத்துவிடுங்கள்” என உழைப்பை உயர்வாக மதிக்கக் கற்றுத்தந்தவர். “ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்குச் சமம்” என எச்சரித்து, ஏழை - எளிய மக்களின் மீது அனைவரும் காட்டவேண்டிய அக்கறையைப் போதித்தவர்.
“இறைவன் உங்கள் பக்கம் இருக்கும்போது எந்த சக்தியாலும் உங்களை எதுவும் செய்துவிட முடியாது” என்ற நபிகளாரின் நம்பிக்கையை என்றைக்கும் மனதில் கொள்வோம். துரோகிகளிடமிருந்தும், சூது மதியாளர்களிடமிருந்தும் மக்களைப் போராடிக் காப்பாற்றிய நபி பெருமகனார் அவதரித்த திருநாளில், நல்லிணக்கத்தையும் அன்பையும் பேணி, உயர்வுகளைப் பெற்றிட உழைத்திடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
ttv wishes miladi nabi wishes to muslims