திருவண்ணாமலை தீபத்திருவிழா.! யாருக்கு அனுமதி.? விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.!!
tiruvannamalai deepam 2020
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு 10 நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெறவுள்ளது. 4:00 மணி அளவில் அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். அதையடுத்து, பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியசாமி திருத்த வாரி நடைபெறும்.
மாலையில் பஞ்சமூர்த்திகள் சுவாமி சன்னிதானம் முன்பாக எழுந்தருள்வார்கள். பின்னர் 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னிதானத்தில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். சாமி சன்னிதானத்தின் முன்பு அகண்ட தீபமும், அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளை கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,பௌர்ணமியை ஒட்டி நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
English Summary
tiruvannamalai deepam 2020