தினம் ஒரு திருத்தலம்... சங்கு வடிவில் கோவில்... லிங்க வடிவில் பலா.. வாங்க பார்க்கலாம்..!!
thiru neelaganteswarar temple in courtallam
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில் :
அமைவிடம் :
உலகம் சமநிலையை அடைய தென் பகுதிக்கு அகத்தியர் நடந்து வந்தாராம். இங்கு வந்த அகத்தியர் குற்றாலம் பகுதியில் ஒரு விஷ்ணு கோயில் இருந்ததைப் பார்த்தாராம். பின் அதனை சிவன் கோவிலாக மாற்றியுள்ளார். அகத்தியர் மாற்றிய அந்த கோயில்தான் குற்றாலத்தின் பெரிய அருவி பக்கத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாதர் கோயில்.
மாவட்டம் :
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்.
எப்படி செல்வது?
தென்காசியிலிருந்தும், செங்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 64 சக்தி பீடத்தில் இது, 'பராசக்தி பீடம்" ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது. இத்தலத்தில் உள்ள தலமரமான பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், 'லிங்க"த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.
சங்கு வடிவில் கோயில் : உலகில் எங்கு கோயில் அமைக்கப்பட்டாலும், சதுரம் அல்லது செவ்வக வடிவில்தான் அமைக்கப்படுவது வழக்கம். சில கோயில்கள் வட்ட வடிவிலும் அமைக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால், உலகில் சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள முதலும் இதுவரையில் கடைசி கோவிலும் இதுதான்.
ஆதியில் வைணவத்தலமாக இருந்த இத்திருக்கோயில் பின்பு சைவத்தலமாக மாறியுள்ளது. இங்குள்ள சிவனுக்கு 64 மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோயில் திருவிழா :
ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, தை மாத மகத்தில் தெப்போற்சவம், பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும் 'பத்ரதீப" விழா இங்கு வெகுவிமர்சையாக நடைபெறும்.
வேண்டுதல் :
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களும், தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றாலநாதரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்சனை நீங்குவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன் :
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
பிரசாதம் :
சிவனுக்கு அபிஷேகம் செய்த தைலம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
English Summary
thiru neelaganteswarar temple in courtallam