இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டின தசரா விழா!
The world famous Kulasekaranpattina Dussehra festival started today with flag hoisting
தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதி உலா நடைபெறும்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் எழுந்தருளியுள்ள ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இவ்விழவானது உலக பிரசித்தி பெற்ற விழாவாகும். தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு நேற்று காலை காளி பூஜை, மதியம் அன்னதானம், மகுட இசை, சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி இதனைத் தொடர்ந்து மாலையில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இவ்விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நேற்று காலை முதல் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள். தாங்கள் விரதம் இருக்கும் தசரா பிறையில் தெளிப்பதற்காக புனித நீரை கோவிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர்.
மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்று மஞ்சள் கயிற்றில் காப்பு அணிந்து பல்வேறு வேடமிட்டு ஊர்வலமாக சென்று காணிக்கை வசூலித்து விழா நிறைவு நாளில் கோயிலில் செலுத்துவார்கள்.
இந்த தசரா விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி இரவு வீதி உலா நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சூரசம்காரம், விழாவின் பத்தாம் நாளான வரும் 5ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது.
மேலும் விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
English Summary
The world famous Kulasekaranpattina Dussehra festival started today with flag hoisting