தினம் ஒரு திருத்தலம்... உலகிற்கு முன்னதாக தோன்றிய லிங்கம்... எமனுக்கு தனிக்கோயில்...!!
sri vanchinadha swamy temple
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி கோயில் :
அமைவிடம் :
திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 70-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.
மாவட்டம் :
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாஞ்சியம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் அச்சுதமங்கலம் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
கோயில் சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பூமியில் தோன்றிய சுயம்புலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும் லிங்கம்.
இந்த லிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தோன்றியதாகவும், இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ள லிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சிய லிங்கத்தை வழிபட்டு வணங்கி வருகின்றன.
இந்த சுயம்புலிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.
காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். திருவாஞ்சியம் காசியை விட 1/16 பங்கு மேலானதாக கருதப்படுகிறது.
காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படும் திருத்தலம். இங்குள்ள குப்தகங்கைத் தீர்த்தம் மிகவும் புனிதமானது.
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
பிரளய காலத்தில் அழியாமல் நிலைத்து நின்ற தலம். எமனே இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குகிறார். இத்தலத்திற்கு வருபவர்கள் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே சிவனாரைத் தரிசிக்க வேண்டும். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.
கோயில் திருவிழா :
ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா, கார்த்திகை ஞாயிறு நாட்கள் (அதிகாலை வேளையில் தீர்த்தவாரி நடைபெறும்.) மாசிமகப்பெருவிழா (பிரம்மோற்சவம்), ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வேண்டுதல் :
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்தகங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.
நேர்த்திக்கடன் :
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
English Summary
sri vanchinadha swamy temple