நாளை புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வழிபட்டு செல்வ செழிப்பை பெறுங்கள்.!
purattasi 2nd purattasi special
புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பெறுவது ஏன்?
புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்று அழைப்பார்கள். 108 திவ்ய தேசங்கள் உட்பட எல்லா பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தில் வழிபாடுகள், உற்சவங்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படும்.
புரட்டாசி மாதம் :
சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத் தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. புரட்டாசியில் பெருமாளை வழிபடுவதால் புதனின் அருள் நமக்கு கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின் நட்புக்கிரகம் சனி. எனவே, இவரை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும்.
புதன் சகல கலைகளிலும் வல்லவர். புதன் புத்திக்கூர்மை, கற்றல் போன்றவற்றிற்கு அதிபதி. ஆகையால் இவரை வழிபடுகிறவர்களுக்கு அறிவைக் கொடுப்பார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் :
விரதம் இருப்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி, துளசி இலை சேர்த்த தீர்த்தத்தை ஒரு செம்பில் ஊற்றி படம் முன் வைத்து வணங்க வேண்டும். அதை சிறிதளவு அருந்தி விரதத்தை துவங்க வேண்டும்.
விஷ்ணு புராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் உள்ளிட்டவற்றை படிக்கலாம்.
மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்பு :
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். அல்லது வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் வழிபடலாம்.
பெருமாள் கோவிலுக்கு துளசிமாலை வாங்கி சென்று வழிபட வேண்டும். இனிப்பும், எள்ளும் கலந்து காகத்திற்கு உணவு அளிக்கலாம். இதன் மூலம் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும்.
புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
எல்லா மாதங்களிலும் சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். ஆனால், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
புரட்டாசி சனிக்கிழமையான நாளை பெருமாளை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை.
English Summary
purattasi 2nd purattasi special