புஷ்கரிணி தீர்த்தம்... ஏகாதசி விரதத்திற்குரிய தலம்.!!
parimala ranganather temple in thiruvilandur
அருள்மிகு பரிமள ரங்கநாதர் கோவில் :
மயிலாடுதுறை மாவட்டம் காவிரி நதியின் வட கரையில் ஒருபகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப் பெயர் திருஇந்த;ர். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் இது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 26 ஆவது திவ்ய தேசமாக இக்கோவில் இருக்கிறது.
மாவட்டம் :
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், திருவிழந்தூர், மயிலாடுதுறை மாவட்டம்.
கோயில் சிறப்பு :
இத்தல பெருமாள் வீர சயனத்தில், கிழக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இவரை சந்திரன் தரிசித்துள்ளார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வேத சக்ர விமானம் எனப்படும்.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது.
வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப்பெற்றான்.
கங்கையை விட காவேரி நதி இத்தலத்தில் புனிதத்தன்மை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது.
இத்தலம் ஏகாதசி விரதத்திற்குரிய தலமாக இருப்பதால் மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு சென்று ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பது அனுபவசாலியான பக்தர்களின் நம்பிக்கை.
பாவம் போக்கும் ஆலயம் :
சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் திருப்தி அடையவில்லை. தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது. என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை போக்கியதாக சொல்கிறார்கள். இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசனவல்லி என்ற பெயர் ஏற்பட்டது.
பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் குறை விலகிவிடும். மற்ற தலத்திற்குச் சென்றும், பாவம் தீரவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாவம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.
திருவிழா :
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு. ஆடி மாதம் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் பத்து நாள். ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு. புரட்டாசி மாதம் தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் பத்துநாள் துலா பிரம்மோற்சவம். மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம். தை முதல் நாள் சங்கராந்தி உற்சவம். பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
பிரார்த்தனை :
ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. சந்திர பகவானின் தோஷம் நீங்கிய கோவில் என்பதால் இங்கு வந்து பரிமள ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் வழிபடுபவர்களுக்கு சந்திரனின் தோஷங்கள் நீங்குகிறது.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
English Summary
parimala ranganather temple in thiruvilandur