8 ஸ்தல விருட்ச மரங்கள் கொண்ட அபூர்வ கோவில்!
kumbakonam athisaiya kovil
ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். ஆனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் 8 ஸ்தல விருட்சங்கள் உள்ளது. அந்த கோவிலை பற்றி பார்க்கலாம்.
முந்தைய காலங்களில் அடர்ந்த மரங்கள் இருந்த வனப்பகுதிகளிலிருந்தே ஆலயங்கள் உருவாகின. பின்பு வனப்பகுதிகள் நகரங்களாக உருமாற்றம் செய்யப்பட்டபோது, அந்தப் பகுதியில் எந்த மரம் அதிகமாக இருந்ததோ, அந்த மரம் கோவிலில் ஸ்தல விருட்சமாக வைக்கப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.
பொதுவாக ஆலயங்களில் ஒரே ஒரு ஸ்தல விருட்சம்தான் இருக்கும். ஒரு சில கோவில்களில் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று கூட இருக்கும். ஆனால் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசைநல்லூர் சிவயோகநாதர் திருக்கோவிலில், 8 ஸ்தல விருட்ச மரங்கள் இருக்கும் அதிசயத்தைக் காணலாம்.
ஸ்தல விருட்சங்கள் :
வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என இங்கு எட்டு ஸ்தல விருட்சங்கள் இருக்கின்றன.
இன்னும் சில அபூர்வங்கள் :
பொதுவாக எல்லா சிவத்தலங்களிலும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம் முதலில் இருக்கும். பின்னர் பலிபீடம், நந்தி என்று இருக்கும். ஆனால் இந்த ஆலயத்திற்குள் நுழையும் போது, நந்திதான் முதலில் உள்ளது.
இறைவன் ஏழு முனிவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் கருவறையில் இருக்கும் சிவலிங்கத் திருமேனியின் மேல் பகுதியில் ஏழு சடைகள் காணப்படுகின்றன.
சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
kumbakonam athisaiya kovil