இயற்கையை மீட்டு உலகைக் காக்க உறுதி ஏற்போம்! டாக்டர் ராமதாஸ் வாழ்த்து!
dr ramadoss onam wishes
மக்களைக் காத்த மன்னன் மகாபலி மீண்டு வரும் நாளான திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். மகாபலி மன்னன் மக்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். ஆனால், இயற்கை அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
கடந்த ஆண்டு ஓணம் திருநாளுக்கு முன்பாக கேரளம் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொண்டது. அந்த பாதிப்பிலிருந்தே கேரள மக்கள் இன்னும் மீளாத நிலையில், இந்த ஆண்டும் இயற்கை சீற்றம் கேரள மக்களை கடுமையாக தாக்கியது. கடவுளின் பூமி என்று போற்றப்படும் கேரளத்தின் மக்கள் இப்போது இயற்கையின் கருணையை வேண்டி நிற்கின்றனர். இயற்கையே கேரளத்துக்கு எதிராக நிற்கிறது.
மகாபலியிடம் மூன்றடி மண் கேட்ட வாமணன் ஓரடியில் மண்ணுலகை ஆக்கிரமித்துக் கொண்டதைப் போல, பேராசை பிடித்த நிறுவனங்கள் சுற்றுலா என்ற பெயரில் ஆக்கிரமித்துக் கொண்டது தான் கேரளத்தில் அடுத்தடுத்து ஏற்படும் இயற்கை பேரிடருக்கு காரணம் ஆகும். இயற்கையை நேசிக்க வேண்டும்; இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்; இயற்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் பொதுமக்கள் மத்தியில் வந்து விட்டால் சீற்றங்களுக்கு இடமில்லாமல் போய்விடும்.
மற்றொரு பக்கம் புவிவெப்பமயமாதல் கேரளாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணமும் இயற்கையை நேசிக்காமல், அதை நாம் சீரழித்தது தான். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், இயற்கைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கக் கூடாது. மாறாக, இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். ஓணம் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.