நாளை பிறக்கிறது... ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி மாதம்... என்னென்ன சிறப்புகள் எல்லாம் இருக்கு?
diwali special 1
தமிழ் மாதங்களில் ஏழாவதாக வருவது ஐப்பசி மாதம் ஆகும். பருவகாலங்களில் முற்பனிகாலம் எனப்படும் பனிப்பொழிவு தொடங்கும் காலமாக இந்த ஐப்பசி மாதம் இருக்கிறது.
ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது.
இம்மாத பௌர்ணமியில் சிவாலயங்களில் உலகின் பரம்பொருளான சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
துலா ஸ்நானம் :
ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஏனைய புண்ணிய நதிகள் கலப்பதால் காவிரியில் இம்மாதத்தில் நீராடுவது துலா ஸ்நானம் என்றழைக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை :
தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடக்கூடிய பண்டிகையாகும். இது ஆண்டுதோறும் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தென்னிந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
கந்த சஷ்டி திருவிழா :
இத்திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வு விரதமுறையைக் கடைபிடிப்பது ஆகும்.
அன்னாபிஷேகம் :
தானங்களில் போதும் என்ற மனதிருப்தியை தருவது அன்னதானம் மட்டுமே. எனவே மனதிற்கு திருப்தி அளிப்பதும், உடல் இயக்கத்திற்கு காரணமானதுமான அன்னத்தை உலகுக்கெல்லாம் உணவளிக்கும் சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கப்படுகிறது.
கேதார கௌரி விரதம் :
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்கள் அனுஷ்டிப்பார்கள். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதமானது கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி வரும் தீபாவளி நாளில் (27.10.2019) இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
தனத்திரயோதசி :
ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி தனத்திரயோதசி என்றழைக்கப்படுகிறது.
அன்றைய தினம் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களையும், துணிகளையும், தங்க நகைகளையும் வாங்கி தீபாவளி அன்று மாலை லட்சுமிகுபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.