திருவண்ணாமலை... 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்.. தரிசிக்க தவறாதீர்கள்..!!
11 days tiruvannamalai deepam
திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது மூலவர் மற்றும் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதியில், பஞ்ச பூதமும் இறைவனே என்ற அடிப்படையில் 'ஏகன் அநேகன்" தத்துவத்தை உணர்த்தும் வகையில், அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து தங்கக் கொடி மரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில், மாலை 4 மணியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
11 நாட்களுக்கு தீப தரிசனம் அதன்பிறகு, உலகுக்கு 'ஆண்-பெண் சமம்" என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சிறப்பு அலங்காரத்தில் அசைந்தாடியபடி 'அர்த்தநாரீஸ்வரர்" பஞ்சமூர்த்திகளுக்கு மாலையில் காட்சிக் கொடுத்தார். இந்த நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு 'மகா தீபம்" ஏற்றப்பட்டது.
அப்போது, 'அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
தீபத் திருவிழாவையொட்டி, அண்ணாமலையார் கோவில் முழுவதும் மலர்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அண்ணாமலை உச்சியில் 'ஜோதி" வடிவமாக இறைவனே காட்சி தருவதால், கோவிலில் உள்ள மூலவர் சன்னதி மூடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழா முடிந்ததும் தெப்ப உற்சவம் கோவிலுக்கு வெளியே உள்ள அய்யங்குளத்தில் நடக்கும். நெருப்பாக இருக்கும் இறைவனை ஆற்றுப்படுத்தும் விதமாக தெப்ப உற்சவம் நடத்தப்படும். இந்தாண்டு கோவில் வளாகத்திலேயே தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உற்சவர் சந்திரசேகர், அம்பாளுடன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி தெப்ப உற்சவத்தில் பங்கேற்று குளத்தை 3 முறை வலம் வருவார். தொடர்ந்து 3 நாள் நடைபெறும் தெப்ப உற்சவம், டிசம்பர் 3ஆம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
English Summary
11 days tiruvannamalai deepam