சபாநாயகர் மீதான தீர்மானமும், கன்னியாகுமாரி எம்பி வசந்தகுமாரின் ராஜினாமாவும்! வெடித்த சர்ச்சை!
non confidential notice to speaker
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டிஸ் கொடுத்துள்ளதால் அவரால் நாங்குநேரி எம்.எல்.ஏ வசந்தகுமார் கொடுக்கும் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போன்ற கருத்துகள் இன்று காலை முதலே இணையதளங்களில் வெளியாக ஆரம்பித்தது.
ஆனால் உண்மை இது கிடையாது. நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் நோட்டிஸ் மட்டுமே ஒரு சபாநாயகரின் அதிகாரத்தை பறித்துவிட முடியாது. அது ஒரு சாதாரண நோட்டிஸ் அவ்வளவுதான்.
சட்டப்பேரவை விதி எண் 179 C யின்படி ஒரு சபாநாயகர் / துணை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 14 நாட்களுக்கு முன்பே நோட்டிஸ் கொடுத்திருக்க வேண்டும்.
அந்த நோட்டிஸ் சட்டசபை கூடும் முதல் நாளில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரே வாக்கெடுப்பிற்கு விட மாட்டார். அத்தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்படும்போது சபாநாயகர் அவையை விட்டு வெளியேறிவிடுவார். துணை சபாநாயகர்தான் அவையில் இத்தீர்மானத்தை வாசித்து அதை முன்மொழிபவர்களை எழுந்து நிற்க சொல்வார். குறைந்தது 35 சட்டமன்ற உறுப்பினர்களாவது எழுந்து நின்றால்தான் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படும்.
35 உறுப்பினர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழியாதவரை அது வெறும் சாதாரண நோட்டிஸ்தான். சாதாரண நோட்டிஸ் மட்டுமே சபாநாயகரின் அதிகாரத்தை முடக்கிவிடாது. வெறும் நோட்டிஸ் மட்டுமே கொடுத்து சபாநாயகரின் அதிகாரத்தை முடக்கமுடியும் என்றால் சுயேச்சை எம்எல்ஏ கூட மாதத்திற்கு ஒருமுறை நோட்டிஸ் கொடுத்து சபாநாயகரின் அதிகாரத்தை முடக்கியிருப்பார்கள்.
சட்டசபையில் 35 எம்.எல்.ஏக்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழியப்படும் நேரம்வரைக்கும் சபாநாயகர் தனக்குரிய அதிகாரத்தோடு இருப்பார்.
தற்போது 3 எம்.எல்.ஏக்கள் (கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், அறந்தாங்கி) குறித்து மட்டும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றுதான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதே தவிர சபாநாயகர் தனக்குரிய எந்த அலுவல்களிலும் ஈடுபடக்கூடாது என உத்தரவிடவில்லை. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள முடியும். அதில் எந்த சிக்கலும் இல்லை என்பதே உண்மையான நிலையாகும்.
- நம்பிக்கை ராஜ்.
English Summary
non confidential notice to speaker