திருச்சியில் எழுச்சி! டெல்லியில் அதிர்ச்சி! முக ஸ்டாலின் எழுதிய கடிதம்!
திருச்சியில் எழுச்சி! டெல்லியில் அதிர்ச்சி! முக ஸ்டாலின் எழுதிய கடிதம்!
திமுகவினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "காவிரி என்பது வெறும் ஆறு அல்ல. அது நம் தமிழ்நாட்டுக்குத் தாய். அதில் ஓடுவது வெறும் நீரல்ல. விளைநிலங்களுக்குத் தாய்ப்பால். அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யும் வகையில் மாநில அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதுமட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் அகண்ட காவிரி பாயும் மலைக்கோட்டை மாநகராம் தீரர் கோட்டம் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
மத்திய அரசைக் கண்டித்து எழுச்சிமிகு முழக்கங்கள். உணர்வலைகளாக அசைந்த அனைத்துக் கட்சிகளின் கொடிகள். திரும்பிய பக்கமெல்லாம் தலைகள் என திருச்சி போர்க்கோலம் பூண்டது.
திருச்சியின் எழுச்சி, டெல்லியை அதிரவைத்த நிலையில், சென்னையிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுதான், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரும் அவசர சட்டப்பேரவைக் கூட்டம். உரிமைக்கான போராட்டத்தில் இது தொடக்க கட்ட வெற்றி. தொடர் வெற்றிகள் நிச்சயம்.
திருச்சியில் தொடங்கியது திக்கெட்டும் பரவும். போராட்டக்களம் பூகம்பமாகும். அது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். மத நல்லிணக்க ஆட்சி மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி மாநிலத்திலும் விரைவில் மலரும்!" என முக ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
dmk stalin wrote letter to dmk members