கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டதுபோல்.. கீ வீரமணி ஆவேசம்!
veeramani in mayiladuthurai meeting
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பெரும் பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: இந்தியாவில் துறவியர்கள் தங்கள் ஆசிரமங்களிலேயே மருத்துவமனைகளை அமைத்து நடத்தி வருகிறார்கள். அவை பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. அவற்றில் பல பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. தனி சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்றால் அவை காவிகளுக்காகத்தான் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஆனால், இத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி பெற அவசியம் இல்லை என்கிறது மத்திய அரசு. ஆனால், அமைச்சர்களோ இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனர். அனுமதியின்றி தமிழகத்துக்குள் சோதனை நடத்த வரக்கூடாது என்று தைரியமாகச் சொன்னால் முதுகெலும்பு உள்ள ஆட்சி நடக்கிறது எனக்கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் முதுகெலும்பு இல்லாத ஆட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசு தாங்கள் கொண்டுள்ள மிருக பலத்தை பயன்படுத்தி, குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் அளவுக்கு, இஸ்லாமியர்களை தனியே பிரிக்கும் வகையில் சர்வாதிகார ஆணவப் போக்குடன் செயல்படுகிறது. பொதுத்தேர்வுகள் இதுவரை மையை வைத்து தேர்வு மையத்திலேயே எழுதினார்கள். ஆனால், இப்போது நடுவீதியிலேயே மையை வைத்துவிடுகிறார்கள். இந்நிலையில், இந்த அரசு சிறந்த நிர்வாகத்துக்கான பரிசினைப் பெற்றுள்ளது.
1920-இல் சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவம் படிக்க விண்ணப்பிக்கவே முடியும் என்று இருந்த நிலையை மாற்றியவர் தந்தை பெரியார். 1920-இல் இருந்த நிலையை மீண்டும் கொண்டு வரும் முயற்சிதான் நீட் தேர்வு. கல்வி முறையில் முன்பிருந்த தடைகளை, கடந்த 100 ஆண்டுகளில் திராவிட தலைவர்கள் போராடி நீக்கியதை, மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக நீட் தேர்வை கொண்டு வருகிறது மத்திய அரசு. நீட் தேர்வின் ஆபத்து இன்றைய தலைமுறை மருத்துவர்களுக்கே புரியவில்லை.
3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, திராவிடர் கழகம் முயற்சியால், மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, சட்டப்பேரவையில் பேசியதன் விளைவாகவே ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு நீட் தேர்வை எதிர்த்து. இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தது. முதல் வருடம் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றதுபோல், அடுத்தடுத்த வருடங்களில் விதிவிலக்கு பெற தற்போதைய அரசுக்கு தெம்பு இல்லை. மடியில் கனம் உள்ளதால்தான் வழியில் பயம் உள்ளது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தேர்வு நடத்தும் உரிமை பல்கலைக்கழகங்களுக்கே உள்ளது. இதில், மத்திய அரசு தலையிடுவது மாநில உரிமைகளை பறிப்பதாக உள்ளது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேசன் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை. இவை அனைத்தையும் இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான முதல் ஒத்திகையே நீட் தேர்வு முறை. நீட் தேர்வு முறையில் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு முறையில் கேள்விகள் கேட்கப்படுகிறது. குஜராத்தில் சுலபமாக உள்ள கேள்வித்தாள், தமிழகத்தில் கடினமான முறையில் கேட்கப்படுகிறது. நீட் தேர்வில் கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால், 1176 மதிப்பெண்கள் பெற்ற அனிதா தற்கொலை செய்துகொண்டு இறக்கும் நிலை ஏற்பட்டது. மாநில பட்டியலில் உள்ள பொது சுகாதாரத்தை மத்திய அரசே ஏற்று நடத்தும் என மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
கருணாநிதியின் முயற்சியால் தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஆனால், கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிகொண்டதுபோல், இந்த மருத்துவக்கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர்களே அதிக அளவில் படிக்கும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் உரிமைகளை காற்றில் பறக்கவிடும் மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும் என்றார்;. கூட்டத்தில், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : மணி
English Summary
veeramani in mayiladuthurai meeting