முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி.!
ttv say about kodanadu issue
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி, திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்துள்ள திமுக, இந்த வழக்கில் மேல் விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்கு எதிராக அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சம்பந்தம் இல்லை என்றால்., அவர் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் நேற்று பங்கேற்ற டிடிவி தினகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், " மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று சொல்வார்கள்., முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். அவர் பயப்பட வேண்டிய தேவையே இல்லை.
அம்மா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. அதனை அப்படியே தொடர்வது தான் நல்லது. திமுகவினர் தேவையில்லாத வேலை செய்து வருகின்றனர். இதனை அப்படியே தொடர்ந்திருந்தால் ஒரு பெருந்தன்மையான ஒரு அரசாங்கமாக இருந்திருக்கும். ஆனால், அந்த பெருந்தன்மையை திமுக அரசிடம் நாம் எதிர்பார்க்க முடியாது" டிடிவி தினகரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv say about kodanadu issue