அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பால் டிடிவி தினகரன் கவலை.!!
TTV dinakaran sad about central and state govt announcement
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல்களில், அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கனரக வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் அதிகளவு இயங்கி வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுங்க கட்டணம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சுங்கசாலைகள் மீண்டும் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த விஷயம் பெரும் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது.
பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசிய பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும். இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு, நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களின் ஒருமாத சம்பளம் நிலையில் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவு செய்த ட்விட்டர் பதிவில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஊரடங்கு நேரத்தில் தனியார் நிறுவனங்கள் எதுவும் ஊழியர்களிடம் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது என தமிழக அரசு கூறியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் அரசுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப்பதுடன், கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட தமிழக அரசு முன் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
TTV dinakaran sad about central and state govt announcement