அமமுகவினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


அமமுக கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் பாசமிகு கழக உடன்பிறப்புகளுக்கு… புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அடியொட்டி வந்த லட்சோப லட்சம் தொண்டர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தில், நியாயத்தின் சுடரொளியாக, அதர்மத்தை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டிட இரண்டாண்டுகளுக்கு முன் உங்களால் உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

அம்மா அவர்களின் பேரியக்கத்தையும், அந்த இயக்கத்திடம் இருந்த தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பையும் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக துரோகிகள் அடகு வைத்தபோது அம்மாவின் உண்மைத் தொண்டர்களிடம் ஏற்பட்ட மனக்குமுறலின் வெளிப்பாடே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். 

நம் தாயின் திருப்பெயரை இயக்கத்தில் கொண்டு அவரின் திருவுருவத்தை தாங்கிய கொடியை, எனது ஆருயிர் நண்பன் மறைந்த மேலூர் ஆர்.சாமிக்குச் சொந்தமான இடத்தில் ஏற்றி வைத்து, மதுரை மேலூரில் மார்ச் 15, 2018ல் இந்த இயக்கம் முகிழ்த்து எழுந்தது. பணம், பதவி இவற்றை எல்லாம் துச்சமென நினைத்து அம்மா அவர்களின் கொள்கைகளைக் காப்பதும், அவர்கள் வழி நின்று தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பதுமே தலையாய கடமை என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நீங்கள் தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி.

நமது இயக்கம் முத்தான மூன்றாம் ஆண்டில் கால்பதித்திருக்கும் இந்த நல்ல நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நீங்கா நினைவுகள் காற்றலைகளில் கலந்திருக்கும் சென்னை, ராயப்பேட்டையில் நமக்கு புதிய தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ளது. இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு இங்கிருந்து சட்டமன்றத் தேர்தல் வேலைகளைப் புத்தம் புது உற்சாகத்தோடு தொடங்கி இருக்கிறோம். பதிவு பெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில், வெற்றிச்சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம்.

அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன. அவற்றில் நாம் பெறுகிற வெற்றி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்குவதற்கு கட்டியங்கூறப் போகிறது. துரோகிகளைப் பொறுத்தமட்டில் ஆட்சி முடிந்ததும் கிடைத்தவரை லாபம் என்று மூட்டைக்கட்டி தோளில் போட்டுக் கொண்டு போய்விடுவார்கள். அவர்களுக்கு அம்மாவின் கொள்கைகளைப் பற்றியும் கவலை இல்லை; தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் கவலை கிடையாது. 

சம்பந்திகளின் நலன், சகலபாடிகளின் வசதி வாய்ப்புகளைப் பற்றியே சிந்திக்கிற இவர்கள் இயக்கம் குறித்தும், நாட்டு மக்கள் பற்றியும் எப்படி சிந்திப்பார்கள்? அதனால் ஆட்சியின் அந்திம நேரம் நெருங்கும் போது நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டதைப் போல சிதறத்தான்போகிறார்கள்.இதை எண்ணி பயந்து கொண்டுதான், நாம் அமைதியாகிவிட்டோம் என்பது போன்ற பொய்ப்பிம்பத்தை ஊடகங்களின் இருட்டடிப்பு வழியாக சிலர் உருவாக்க முனைகிறார்கள். ஆனால் அதனை எல்லாம் உடைத்து நொறுக்கிவிட்டு, ஆயிரமாயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் உணர்வையும், எழுச்சியையும் அத்தனை எளிதில் யாராலும் அடக்கிவிட முடியாது என்பதற்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பதித்த முத்திரையும், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருநெல்வேலி கங்கைகொண்டானில் கடல் அலையைப் போல திரண்ட தீரர் கூட்டமுமே சாட்சியாக அமைந்தது. 

அன்றைய தினமும், அதன் தொடர்ச்சியாகவும் நம் அம்மா அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடி வரும் அளவுக்கு உணர்வோடும், உரிமையோடும், உண்மையோடும் வேறு யாரும் கொண்டாடிடவில்லை என்பதற்கு தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் கழக நிகழ்ச்சிகளே ஆதாரம். நம்முடைய இப்புனித லட்சிய பயணத்தில் ஏதேனும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில்தான் நம் தியாகத்தலைவி சின்னம்மா பற்றி அக்கறையோடு பேசுவதைப் போல துரோகக்கூட்டம் நடிக்கிறது. சிங்கம் சிறைபட்டு இருக்கிறதே என்று சிறு நரிகள் கவலைப்படுவது வேடிக்கையல்லவா?! சாப்பிட்ட கையின் ஈரம் காய்வதற்குள் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த இந்தத் துரோகிகளோடு தியாகத்தலைவி சேருவார் என்று சொல்வது அவர்களையே அவமானப்படுத்துவது போலாகாதா? எனவே இந்த சூதுமதியாளர்களின் செப்படிவித்தைகளை எல்லாம் இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு நம்முடைய லட்சியப்பயணத்தைத் தொடருவோம்.

தேர்தல் நெருங்குவதால் நாளொரு வேஷம் போடும் வேலைகளில் பழனிசாமி கூட்டம் மேற்கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, எட்டுவழிச்சாலையை கொண்டுவரத் துடிக்கும் பழனிசாமி, இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் என்ற புதிய அரிதாரம் பூசியிருக்கிறார். ஏற்கனவே உள்ள எண்ணெய் கிணறுகளையும், எரிவாயு திட்டங்களையும் பற்றி வாய் திறக்காமல் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். 

நீட் விவகாரத்தில் எப்படி ஒரு கபட நாடகமாடினார்களோ அதே போலே இப்போதும் ஒரு நாடகம். இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். இதேபோல மக்களை ஏமாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பங்கையும் ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே தீங்கிழைத்த பல திட்டங்களை முன்னெடுத்தது தீயசக்தி தி.மு.க. கூட்டம்தான். டெல்டா பகுதியில் எரிவாயுத் திட்டங்களுக்கு ஒப்பந்தம்போட்டுவிட்டு இன்று அதை எதிர்க்கும் வேலையை செய்கிறார்கள். 

இதைப்போலத்தான் இஸ்லாமிய பெருமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிற NRCயை 2003-ல் கொண்டுவந்தது தி.மு.க அங்கம் வகித்த வாஜ்பாய் அரசுதான். அதேபோல் NPRஐ 2010-ல் செயல்படுத்தியது தி.மு.க அங்கம் வகித்த மன்மோகன் சிங் அரசுதான். அப்போது ஆதரவு அளித்துவிட்டு இப்போது எதிர்ப்பது என்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இது சிறுபான்மை மக்களை ஏமாற்றும் அரசியல் பித்தலாட்டமாகும். மதச்சார்பற்ற நாட்டில் எல்லோரும் சமமான உரிமையுடனும், பயமின்றியும் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். 

அதனால்தான் CAA விவகாரத்தில் மத அடிப்படையில் மக்களை அணுகுவதை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழகம் முழுவதும் இது தொடர்பாக நடக்கும் போராட்டங்களில் கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இந்த நேரத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இல்லாத சூழலையும், பழனிசாமி கம்பெனி அடிக்கும் கூத்துகளையும் பயன்படுத்திக் கொண்டு நமக்கும், தமிழ்நாட்டின் நலன்களுக்கும் பரம்பரை எதிரியான தி.மு.க, எப்படியாவது மீண்டெழுந்துவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது.

அதனை வெறும் பகல் கனவாக்கி, தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நம்முடைய உழைப்பை ஒருமுகப்படுத்துவோம். தமிழகத்திற்கு தீங்கிழைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்திடுவோம். அதற்கான உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு, அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடும் நம் தாயின் போர்க்குணத்தோடும், இதயதெய்வம் அம்மா அவர்கள் வளர்த்த சிங்கக்குட்டிகளாக லட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம், வென்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran letter to ammk members


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->