அன்புமணி பெற்றுக்கொடுத்த தடை நீடிக்குமா?! நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
tomorrow trail in supreme court 8 way road case
கடந்த ஆண்டு சென்னை முதல் சேலம் வரையிலான 8 வழி பசுமை சாலை திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் அதனை வரவேற்று பேசியது. பின்னர் தேர்தல் நேரத்தில் எதிர்ப்பதாக கூறியது.
பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிராக களமிறங்கியது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து கருத்து கேட்டு, பாதிக்கப்படும் மக்களை அழைத்துக்கொண்டு நேராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் மக்களவையில் இது குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்தி, அதனை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்திருந்த நிலையில், 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தடை விதித்து வெளியிட்ட தீர்ப்பினை, ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் இந்த திட்டத்தின் திட்ட இயக்குனர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணையானது கடந்த ஜூன் 3ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கேவியட் மனுவை தாக்கல் செய்திருந்த அன்புமணி சார்பில் பாமக வழக்கறிஞர் பாலு ஆஜராகினார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இது குறித்து விளக்கமளிக்க அன்புமணி உள்ளிட்ட அனைத்து மனுதாரர்களுக்கும் நோட்டிஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது நாளை (July 31) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் தீர்ப்பு எப்படி வரும் என ஐந்து மாவட்ட விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
English Summary
tomorrow trail in supreme court 8 way road case