இரு தமிழக வீராங்கனைகளுக்கு அரசு பணி - முதல்வர் ஸ்டாலின்.!
tn govt announce oct 10
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இரு வீராங்கணைகளுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி உள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.10.2021) தலைமைச் செயலகத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2020 - ல் கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீராங்கணைகள் செல்வி வெ.சுபா மற்றும் செல்வி எஸ்.தனலட்சுமி ஆகியோருக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்குதல், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்தல், வெற்றி பெறும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.
அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கணைகள் செல்வி வெ.சுபா மற்றும் செல்வி எஸ்.தனலட்சுமி ஆகியோர் கடந்த 30.7.2021 ஆம் நாளன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 4x400 மீட்டர் ‘கலப்பு தொடர் ஓட்டத்தில்' பங்கேற்று பெருமை சேர்த்த இவ்விரு வீராங்கனைகளையும் கௌரவப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.