திமுக சின்னத்தில் போட்டியா?! திருமாவளவன் கொடுத்த தோழமை விளக்கம்!
Thirumavalavan explains about DMK Symbol issue
தமிழகத்தில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியையும், கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கையையும் உறுதி செய்து கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.
திமுக கூட்டணியில் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என திடீரென போர்க்கொடி தூக்கினார்கள். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது இதே கூட்டணியில் இடம் பெற்றிருந்த இரண்டு கட்சிகளும், ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் விசிக வின் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என திருமாவளவன் அறிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியது. தனிச் சின்னம் என்றால் மூன்று தொகுதிகளை மட்டும் தான் தருவோம் அதனை எடுத்துக் கொள்ளுங்கள், திமுகவின் சின்னம் என்றால் ஆறு முதல் எட்டு தொகுதிகள் வரை தருவோம் என கூறியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து வேறு வழியின்றி திமுகவின் சின்னத்திலேயே விடுதலை சிறுத்தைகள் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து இன்று வெளியான தகவல் ஒன்றில், தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன் தனிசின்னம் பெற்று அதை பிரபலப்படுத்த முடியாது என்பதாலும், வெற்றி வாய்ப்பு கருத்தில் கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சி ஒருபோதும் தனித்தன்மை இழக்காது என அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த விஷயம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனையடுத்து இதற்கு திருமாவளவனே விளக்கம் அளித்துள்ளார். 'திமுக சின்னத்தில் விசிக போட்டி' என்று யாம் அறுதியிட்டு சொல்லவில்லை.கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகள் கூட்டணியின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்தம் சின்னத்தில் போட்டியிட ஆலோசனை வழங்குவதுண்டு. எங்களைப் போன்றோர் அதனைப் பரிசீலிப்பதுண்டு. ஆனால், எமது #தனித்துவமே_முதன்மையானது." என தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan explains about DMK Symbol issue