TET ஆசிரியர் தகுதித் தேர்வு : ஆசிரியர்களின் போராட்டம் - தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கோரிக்கை!
TET Exam Teacher Protest issue MNM
TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களின் போராட்டம் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில், "2013, 2014, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியுற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரியும், தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்தும் முறையை ரத்துசெய்யக்கோரியும் TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களின் நலக்கூட்டமைப்பினர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமுதாயத்தைச் சீரமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஒழுக்கமும், சிறந்த கல்வித்தகுதியும் கொண்டதாக இளைய சமுதாயத்தை செதுக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மிகமுக்கியமானது என்பதை யாரும் மறுக்க இயலாது.
கொரானா காலகட்டத்திற்குப் பிறகு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டும், தமிழகமெங்கும் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்பும் விதமாகவும், கடினமான தகுதித்தேர்வான TET தேர்வில் தேர்ச்சிபெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகிடைக்காதவர்களின் நிலையைக் கவனத்தில் கொண்டும் தமிழக அரசானது ஆசிரியர் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து, படிப்படியாகவாவது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி மக்கள் நீதி மய்யமானது ஏற்கனவே இரண்டு அறிக்கைகள்(18/12/21, 04/03/22) வெளியிட்டிருந்தது என்பதை நினைவு கூர்கிறோம்" என்று செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
English Summary
TET Exam Teacher Protest issue MNM