தவிக்கும் தமிழ்நாடு! போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் - ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


"வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு முழுவதும் நிலவும் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிடவும் - நிலுவையில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத கடும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் “ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்” என்று குடிநீருக்காக மக்கள் தினமும் திண்டாடும் அவலநிலை அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகருக்கு நீர் ஆதாரங்களாகத் திகழும் ஏரிகளை உரிய காலத்தில் தூரெடுத்து ஆழப்படுத்தாமலும், மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கத் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்காததாலும் அந்த ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. “கமிஷன், கரெப்சன், கலெக்சன்” என்ற ஊழல் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி- குடிநீர் திட்டங்களிலோ, கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களிலோ எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. பொறுப்பற்ற உள்ளாட்சித்துறை அமைச்சரின் படு தோல்வியால் கோடை வெயிலில் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக தாய்மார்கள் அலையும் கொடூமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பருவமழை தவறியவுடன் குடிநீர் ஆதாரங்களை அதிகரிக்கவும், கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை முறைப்படி பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு மோசமாகத் தவறி விட்டது. கிருஷ்ணா நதி நீரைப் பெறவும் அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரியில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் முயற்சிக்கவில்லை. கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதிலோ, நெம்மேலி கடல்நீர் குடிநீர் திட்டத்திலிருந்து 100 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது என்று சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிப்பதிலோ எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. கடலோர மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை,போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றியிருந்தால் கூட இவ்வளவு மோசமான தண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்திருக்க முடியும். எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் ஊழல் ராஜ்யத்தை நடத்துவதில் மட்டுமே அதிமுக அரசு அதிகமான கவனம் செலுத்தியதால் இன்று ஒரு குடம் தண்ணீருக்கு கால் கடுக்க நின்று - அதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். குடிநீருக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை மறியல்களும், போராட்டங்களும், குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஆனால் கோட்டையில் இருக்கும் முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ அதுபற்றி எவ்வித அக்கறையும் காட்டாமல்- குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை கூட எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்காத மக்களின் பிரச்சினை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று மெத்தனமாக இருக்கிறார்களா என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

இந்நிலையில் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றிட முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளை, அதிகாரிகளுடன் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனே ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் படும் இன்னல்களை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்க முடியாது.

ஆகவே கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே குடிநீர் இன்றி அவதிப்படும் தாய்மார்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு தங்களால் இயன்றவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கிட முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu water scarcity govt take action said stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->