தங்கக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு.. ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்.!
Swapna suresh statement
கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூபாய் 14.82 கோடி மதிப்பிலான தங்கத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றி வந்தார். இந்த கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே டி ஜலீல் உள்ளிட்டோருக்கு பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ் தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாக கூறினார்.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக கூறினார். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.